Tuesday, May 27, 2008

திருவாடானை


சூரியனுக்கு ஒளி கொடுக்கும்படியாக, ஆதி ரத்தினமாக இருந்து இறைவன் அருளிய திருத்தலம்...
தனக்கே உரித்தான தேஜ சண்டேஸ்வரருடனும் தனது தேவி மார்களுடனும் சூரியன் காட்சி கொடுக்கும் திருத்தலம்...
ஆடு, யானை இரண்டும் சேர்ந்த வினோத உரு வம் வழிபட்ட திருத்தலம்...
தட்சிணாமூர்த்தியின் சந்நிதிக்கு எதிரில் அமர்ந்து முறையான உபதேசம் பெற்று, 16 லட்சம் முறை பஞ்சாட்சரத்தை (நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம்) ஓதினால், இந்தப் பிறவியி லேயே இறைவனைக் காணலாம் எனும் நம்பிக்கை, இன்றும் இருந்து வரும் திருத்தலம்...
சுக்கிர தோஷ பரிகாரத்துக்கான திருத்தலம்...
மலர்கள் கொண்டு அர்ச்சித்தால், எல்லா விதமான வினைகளையும் தீர்த்து வைக்கும் இறை வன் எழுந்தருளியிருக்கும் திருத்தலம்...
ஆகம- சாஸ்திர மற்றும் பதிகச் சிறப்புகள் பெற்ற திருத்தலம்...
பாரிஜாத வனம், வன்னி வனம், குருந்த வனம், வில்வ வனம், ஆதிரத்தினேஸ்வரம், மார்க்கண்டேயபுரம், கோமுக்தீசம், விஜயேஸ் வரம், அஜகஜேஸ்வரம், சரவணப் பொய்கை என்று பற்பல பெயர்களால் அழைக்கப்பெறும் திருத்தலம்...
இத்தனை பெருமைகளும் கொண்ட திருத்தலம் எங்கே இருக்கிறது? புறப்படுங்கள், போகலாம்!
காரைக்குடியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலை விலும், தேவகோட்டையில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவிலும் உள்ள திருவாடானை திருத்தலம் போகலாம். காரைக்குடி, தேவகோட்டை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகள் மூலமோ, வசதிக் கேற்ப தனி வாகனங்களிலோ செல்லலாம்.
ஊரின் மையப் பகுதியில், 130 அடி உயர ராஜ கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது, இந்தப் பழைமையான ஆலயம். கிழக்கு ராஜ கோபுரம் உயரமானது மட்டுமல்ல, ஒன்பது நிலைகளுடன் வெகு அழகாக உள்ளது. கோபுரத்தை வணங்கி உள்ளே செல்கிறோம்.
பெரிய கோயில். விசாலமான முகப்பு மண்டபம். இது நூற்றுக்கால் மண்டபம். மண்டபத்தில் ஆங்காங்கே சில பக்தர்கள்... யாரோ சிலர் கேட்டுக் கொண்டிருக்கும் வினாக்களுக்கு மிகப் பொறுமை யாக விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் அர்ச் சகர்... பரிகாரம் செய்வதற்காகக் காத்திருக்கும் ஒரு குடும்பம்... மண்டபத்தின் வட கிழக்குப் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திருக்கோயில் அலுவலகம்... என்று தென்னகக் கோயி லின் அச்சு அசலான தோற்றத்துடன், விபூதி, மஞ்சள், கற்பூரம், பன்னீர் ஆகியவை கலந்த வாசனையும், ரம்மியமான கலகலப்புமாகத் திகழ் கிறது திருவாடானை திருக்கோயில்.
திருவாடானை. அழகான பெயராகத் தெரிந்தாலும், இதன் பொருள்? அதைத் தெரிந்து கொள்ள, காலச் சக்கரத்தில் சற்றே பின்னோக்கிப் பயணிக்க வேண்டும்.
முற்காலத்தில், இந்தத் தலத்துக்குப் பாரி ஜாத வனம் என்றோ ஆதிரத்தினபுரி என்றோதாம் பெயர்கள்.
புஷ்பபத்திரை நதிக்கரையில் துர்வாசர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது, வருணனின் மகன் வாருணி என்பவன், முனிவரது தவத்துக்கு இடையூறு செய்தான். கோபக்காரரான துர்வாசர் சும்மா இருப் பாரா? 'இந்தா, சாபம் பிடி' என்றார்.
ஆட்டுத் தலையும் யானை உடலும் கொண்ட வினோத வடிவத்தைப் பெற்ற அவன், அளவற்ற பசியாலும் துன்பப்பட்டான். என்ன செய்வது? துர்வாசரிடமே மன்னிப்புக் கேட்டான்.
பன்னிரண்டு ஆண்டுகள் அப்படியே தண்டனை அனுபவிக்க வேண்டுமென்ற துர்வாசர், அதன்பின், பாரிஜாதவனத்துக்குச் சென்று ஆதிரத்தினேஸ்வரரை வழிபட்டால், சாபம் நீங்கும் என்றார்.
வாருணி அவ்வாறே செய்ய, ஆடும் ஆனையு மாக வழிபட்டுச் சாபம் நீங்கிய இடம் என்பதால், ஆடானை ஆனது; இறைவனும் ஆடானைநாதர் (அல்லது அஜகஜேஸ்வரர்; அஜம்- ஆடு, கஜம் - யானை) ஆனார்.
நூற்றுக் கால் மண்டபம் என்பது, ராஜ கோபுரத்தில் இருந்து உள் வாயில் நோக்கிச் செல்லும் பாதையின் இரு மருங்கும் அமைந்துள்ளது எழில் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள்.
உள் வாயில் அருகே வந்து விடுகிறோம். நமக்கு இடப் புறம் உள்ள நூற்றுக்கால் மண்டபப் பகுதிக்கு (தெற்குப் பகுதி) அலங்கார மண்டபம் என்றே பெயர். உற்சவ காலங்களில், சுவாமியும் அம்பாளும் அலங்காரத்துடன் எழுந்தருளும் இடம். இந்த மண்டபத்தை ஒட்டிய சுவரில், ஸ்தல வரலாறை ஓவியச் சிற்பமாக அமைத்திருக்கிறார்கள்.
நூற்றுக் கால் மண்டபத்தின் வடக்குப் பகுதியில் யாக சாலை. உள் வாயிலின் ஒரு பக்கத்தில் விநாயகர்; இன்னொரு பக்கத்தில் சுப்ரமணியர். வழிபட்டு உள்ளே நுழைகிறோம். கொடிமரம். நந்தி. கொடிமரத்துக்கு முன்பாக, ஒரு பெரிய மணி மண்டபம் போன்ற இந்தப் பெரிய இடம், அப்படியே உள் பிராகாரத்துடன் சேர்கிறது. நந்தி இருப்பதால், இது நந்தி மண்டபம் எனப்படுகிறது.
இங்கிருந்து தொடங்கி, அப்படியே உள் பிராகார வலம் வரலாமா? கிழக்குச் சுற்றில், முதலில் அகத்திய விநாயகர். அடுத்து தேஜசண்டர். அருகிலேயே, தனது தேவியரான உஷா- பிரத்யுஷா சமேத சூரியன்.
சிவாலயங்களில், நிர்மால்ய அதிகாரியாகவும், கோயில் கணக்கு வழக்கு அதிகாரியாகவும் சண்டேஸ்வரர் எனும் சண்டர் இருப்பாரில்லையா? அதுபோல, சில குறிப்பிட்ட தெய்வங்களுக்கும் அவரவர்க்கான சண்டர்கள் உண்டு. 'சண்டர்' என்றால், கோபமான, பாசத்தோடு கூடிய உரிமை கொண்ட, உக்கிரமான... என்பன போன்ற பொருள்கள் உண்டு. அந்த தெய்வத்தின் மீது நிறைந்த பாசம் கொண்டவர் என்றும், தவறு செய்தாலோ தீங்கிழைத்தாலோ கோபப்படக்கூடியவர் என்றும் புரிந்து கொள்ளலாம்.
விநாயகருக்கானவர் கும்ப சண்டர், ஆத்மலிங்கத்துக்கு- த்வனி சண்டர் என்பதாக ஆகமக் குறிப்புகள் உள்ளன.
அந்த விதத்தில், சூரிய பகவா னுக்குரிய சண்டேஸ்வரர், தேஜஸ் (ஒளி) சண்டர் ஆவார். சூரியனுக்கு அருகில் தேஜசண்டர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் மிகவும் அபூர்வமானவை.
சூரியதேவன், இந்தத் தலத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்து, தனது ஆற்றலைப் பெற்றான். அதனால், இங்கே சூரிய பரிகாரம் வெகு விசேஷம்.
கிருத யுகம். சூரியன், தனது ஒற்றைச் சக்கரத் தேரில் சஞ்சரித் துக் கொண்டிருந்தான். அப்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில், அவனது தேர்க்கால் (சக்கரம்) தடை-பட்டது; மேற்கொண்டு பயணிக்க முடிய--வில்லை. ஒன்றும் புரியாமல் சூரியன் விழிக்க, அசரீரியாக அவனுக்கு அருள் வழங்கினார் இறைவன்.
எந்த இடத்தில் தடங்கல் ஏற்பட்டதோ, அந்த இடத்-தில் இறங்கி, அங்கேயே லிங்க வழிபாடு நடத்தச் சொல்லி அசரீரி ஆணையிட்டது. சூரியனும் இறங்கினான். பாரிஜாத வனத்தின் (தேவலோக மரமான பாரிஜாதம், அந்தக் காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் வனமாகப் பெருகிக் கிடந்தது) நடுவில், மணிமுத்தா நதியின் கிழக்குக் கரையில், நீல ரத்தினத்தால் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த சூரியன், அருகிலேயே தீர்த்தம் ஒன்றையும் ஏற்படுத்தி, சிவனாரை வழிபட்டான். இந்த வழிபாட்டால், சூரியனின் ஒளி மேம்பட்டது. அவனது சஞ்சாரம் தடை நீங்கப் பெற்றது. சூரியன், கோள்களின் மண்டலத்துக்கு அதிபதியாக்கப் பட்டான். நீல மணியால் ஆனவர் என்பதாலும், ஆதி காலத்தில் ஏற்பட்டவர் என்பதாலும், சுவாமியும் ஆதி ரத்தினேஸ்வரர் ஆனார்.
இந்த சூர்ய தீர்த்தம், அம்பாள் சந்நிதிக்கு எதிரில் உள்ளது. சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி அன்று இந்தத் தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டால், சகலவித தோஷங்களும் நிவர்த்தியாகும்.
பிராகாரத்தில் தொடர்ந்து வருண விநாயகர் மற்றும் மார்க்கண்டேய விநாயகர். அடுத்து தனீஸ்வரர். தெற்குச் சுற்றில் திரும்பினால், ஆலய பக்கவாட்டு வாயில். அடுத்து, அறுபத்துமூவரின் மூலவர்கள். தொடர்ந்து அறுபத்துமூவரது சித்திரங்கள். தெற்குச் சுற்றின் மூலையில், சப்த மாதர்.
மெள்ள மேற்குச் சுற்றில் திரும்புகிறோம். தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதி. அடுத்த தாக, சோமாஸ்கந்தர். தொடர்ந்து ஆதிலிங்கம், அர்ச்சுனலிங்கம், கௌதம லிங்கம், வருணலிங்கம், கோமுக்தீஸ்வரர், ஜோதிர்லிங்கம், விஸ்வநாதர், விசாலாட்சி, தேவி- பூதேவி உடனாய வரத ராஜர் மற்றும் பிருகுலிங்கம் (இவருக்கு நந்தியும் உண்டு).
வடமேற்குப் பகுதியில் வள்ளி- தெய்வானை உடனாய சுப்ரமணியர். இவர் உயரமானவர்; வஜ்ரம், சக்தி, அபயம்- வரம் ஆகியவற்றுடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் திகழ்கிறார். இந்த முருகர் மீது திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், 'ஆசார பக்தியுடன் ஞானாகமத்தை அருள் ஆடானை நித்தமுறை பெருமாளே!' என்று அருளிச் செய்தார். வடமேற்கு மூலையில் மகாலட்சுமி சந்நிதி.
வடக்குச் சுற்றில் திரும்பினால், உற்சவ மூர்த்தங்கள். இந்தச் சுற்றின் கிழக்குப் பகுதியில் நடராஜ சபை. இந்த நடராஜர் வெகு சிறப்பா னவர். அவரும் சிவகாமியம்மையும் ஐம்பொன் திருமேனியர்.
நடராஜர் மட்டுமா ஆடுகிறார்? அவர் ஆட ஆட, பிரம்மா தாளமிட, விஷ்ணு மேளமிட, தும்புருவும் நாரதரும் தத்தமது கருவிகளை இசைக்க, வியாக்ரபாதரும் பதஞ்சலியும் வணங்கி நிற்க... ஆஹா, கண்கொள்ளா காட்சி! அடுத்து பைரவர். மீண்டும் கிழக்குச் சுற்றுக்குள் திரும்பினால், கார்த்திகாதேவி ஒருபுறமும், ரோகிணி ஒருபுறமுமாக சந்திரன். அடுத்து, தனிச் சந்நிதியில் சனி பகவான்.
திருவாடானை கோயில், செட்டி நாட்டுப் பகுதியில் உள்ளது. நகரத் தாரின் திருப்பணியைக் கண்டுள்ளது. நந்தி மண்டபத்தில் நின்று மூலவர் சந்நிதியைப் பார்த்தால், நகரத்தார் திருப்பணி அமைப்பின் சாயலை நன்கு உணர முடியும். நந்திக்கும் சந்நிதி முகப்புக்கும் இடையில், திருவாசி போன்ற பெரிய வளைவு; விளக்கேற்றுவதற்கு வசதியாக, அதில் நிறைய விளக்குகள்.
நந்தி மண்டபத்தைப் பார்த்துக் கொண்டே மூலவர் சந்நிதியை அடைகிறோம்.
கருவறை... முன்னே அர்த்த மண்டபம்... அதற்கும் முன்னே ஸ்நபனப் பகுதி. மெதுவாக உள்ளே பார்வையைச் செலுத்தினால், அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரரான ஆடானைநாதர். சதுரபீட ஆவுடையார் கொண்ட குட்டை பாணம். நீலக்கல் பாணத்தில் ஆவுடை சேர்க்கப்பட்டவர். இவர்மீது திருஞான சம்பந்தப் பெருமான் பதிகம் பாடி யுள்ளார்.
மாதோர் கூறுகந்தேற தேறியஆதியானுறை ஆடானைபோதினால் புனைந்து ஏத்துவார் தமைவாதியா வினை மாயுமேமங்கை கூறினன் மான்மறியுடைஅங்கையான் உறை ஆடானைதங்கையால் தொழுதேத்த வல்லவர்மங்குநோய் பிணியுமாமேசுண்ண நீறணி மார்பில் தோல் புனைஅண்ணலான் உறை ஆடானைவண்ண மாமலர் தூவிக் கைதொழஎண்ணுவார் இடர் ஏகுமே
இந்தப் பதிகத்துக்கு இரண்டு வகை சிறப்புகள். பாட்டுக்குப் பாட்டு... வினை தீரும், நோய் விலகும், துன்பம் மாயும் என்றெல்லாம் கூறுவதால், இது திருநீற்றுப் பதிகத்துக்கு நிகரானதாகக் கருதப்படுகிறது. இதனை ஓதினால், எத்தகைய நோயும் துன்பமும் சிக்கலும் தீரும்.
இன்னொரு சிறப்பு, அர்ச்சனையைப் பற்றிக் கூறப் பட்டுள்ள தகவல்கள்.
போதினால் புனைந்து ஏத்துதல் (போது- அரும்பு), தோடுமாமலர் தூவி, வண்ண மாமலர் தூவி, கையணி மலர், தேனணிம்மலர், நலங்கொள் மாமலர், கந்தமாமலர், தூய மா மலர் என்று பற்பல மலர்களைக் கொண்டு ஆடானைநாதருக்கு அர்ச்சனை செய்யும் முறைகள் பேசப்பட்டுள்ளன. ஆகவே, பலவித மலர்களைக் கொண்டு இந்தத் தலத்து இறைவனுக்கு பூஜை செய்தால், வினைகள் அகலும். வகை வகையான மலர்களைக் கொண்டு வந்து மக்கள் இவரை வழிபடுவதை இன்றும் காணலாம்.
மூலவரை வணங்கி, மீண்டும் உள் பிராகார வலம் வருகிறோம். கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்கை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர். தட்சிணாமூர்த்தி சந்நிதி, மண்டபம் அமைக்கப்பட்டு நேர்த்தியாக இருக்கிறது. சனகாதி முனிவர்களும் இருக்கிறார்கள்.
சிவாகமங்கள், சிவபெருமானது முகங்களிலிருந்து உதித்தன என்பது ஐதீகம்.
இருபத்தெட்டு சிவாகமங்களில், காரண ஆகமமும், காமிக ஆகமும் மிக முக்கியமானவை. திருவாடானை தலத்து தட்சிணாமூர்த்தி, ஆகமங் களை அருள் உபதேசம் செய்து கொண்டிருப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு.
வேத சாஸ்திர ஆகமக் கல்வி கற்கக் கூடியவர்கள், தட்சிணாமூர்த்தி திருமுன் அமர்ந்து உபதேசம் பெறு வதும், பரிவர்த்தனை பெறுவதும், ஜபம் செய்வதும், பஞ்சாட்சர மந்திரம் ஓதுவதும் இன்றும் நடைபெற்று வருகின்றன. இதை மெய்ப்பிப்பதாக, அருணகிரிநாதரும், 'ஞான ஆகமத்தை அருள் ஆடானை' என்று போற்றுகிறார்.
சற்று நில்லுங்கள். வழக்கமாகக் காண்பதுபோல, கோஷ்ட மாடங்களை மட்டும் பார்த்து விட்டு நகர்ந்து விடாதீர்கள். கோஷ்டப் பகுதியில், சற்றே உயரத்தில் உள்ள நாசித் துளைகளைப் (சிறிய மாடங்கள்) பாருங்கள்!

Wednesday, May 7, 2008

திருப்பனங்காடு

அகத்தியர் வழிபட்ட இறைவன் தாலபுரீஸ்வரர். தாலம் என்பது பனைமரம். பனை மரத்தின் அடியில் எழுந்தருளியதால் இந்தப் பெயர். பனங்காட்டுநாதர், பனங்காட்டீசர் ஆகிய திருநாமங்களும் இவருக்கு உண்டு. திருப்பனங்காட்டு நாதர், ஆளுடையார் பனங்காடுடை நாயனார், திருப்பனங்காடுடை அன்புடைய நாயனார் என்றெல்லாம் இவருக்குக் கல் வெட்டுத் திருநாமங்களும் உள்ளன.
புலத்திய முனி வழிபட்ட இறைவன் கிருபா நாதேஸ்வரர். புலத்தியர் யார்?

நமது புராணங்களில் உயர்வான இடத்தைப் பெறுகிற மாமுனிவர்களில் புலத்தியரும் ஒருவர். பிரம்மாவின் மானஸ புத்திரர்களில் ஒருவரான புலஸ்தியர் (இதுவே தமிழில் புலத்தியர் ஆனது), பிரஜாபதிகளுள் ஒருவர்; சப்தரிஷிகளில் ஒருவர் (சித்திரை-வைகாசி மாதங்களில் வடக்கு வானத்தின் கீழ்ப்பகுதியில் சப்தரிஷி மண்டலத்தைத் தேடுவோமே... அதில் புலத்தியரும் இருக்கிறார்).
புலத்தியரின் பெருமைகள் ஏராளம். தாமே கிருஷ்ணராக அவதாரம் எடுப்பதற்கு முன்னர், தமது பரமபத லோகத்தில் இருந்து விரஜா நதியை யமுனையாகவும், கோவர்த்தன மலையை கிரிராஜனாகவும், பூலோகத்துக்கு பரம்பொருள் அனுப்பி வைத்தார். சால்மலி பகுதியில் (மேற்குக் கடற்கரையைத் தாண்டி), ஒரு தீவில், துரோணர் எனும் மலையரசனின் மகனாகத் தோன்றி இருந்தது கோவர்த்தனம். மிக உயரமாகவும் அகலமாகவும் இருந்த கோவர்த்தனத்தின் அழகைச் சொற்களால் வர்ணிக்க முடியாது.
இதன் அழகையும் பெருமையையும் கேள்விப்பட்ட புலத்தியர், காசியில், தான் நடத்தும் யாக பூஜையில், கோவர்த்தனத்தின் புனிதமும் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டார். துரோணரிடம் அனுமதி கேட்டார். தந்தை அனுமதி கொடுத்த பின்னரும், மகன் கட்டளைகள் போட்டான். முனிவர் தமது உள்ளங்கையில் தன்னைக் கொண்டு போக வேண்டும் என்றும், எங்காவது கீழே வைத்தால் அப்படியே தங்கிவிடுவதாகவும் கோவர்த்தனம் கட்டளை இட்டது.

இதற்கு ஒப்புக் கொண்ட புலத்தியர், கோவர்த்தனத்தைக் கையில் தாங்கிப் புறப்பட்டார். விரஜா... அதாவது யமுனை பகுதியைக் கடக்கும்போது, அங்கேயே தங்கி கிருஷ்ண சேவை யில் ஈடுபட வேண்டும் என்று திட்டமிட்ட கோவர்த்தனம், உள்ளங் கையில் இருந்தபடியே எடை கூடத் தொடங்கியது. கனம் தாங்காமல் புலஸ்தியர் மலையைக் கீழே வைக்க, அசையாமல் அங்கேயே அமர்ந்து கொண்டது கோவர்த்தனம். வந்தது புலத்தியருக்குக் கோபம்... 'இங்கேயே இருந்து கொள்; ஆனால், உனது உயரமும் பருமனும் உனக்குக் கிடைக்காது. குட்டையாகத்தான் இருப்பாய்!' என்று சாபம் கொடுத் தார். இப்போது கோவர்த்தனகிரி (கிருஷ்ணர் தூக்கியபோதும்கூட), தனது அசல் அளவுகளில், பாதியளவுதான் உள்ளதாம். எல்லாம் புலத்தியர் மகிமை! நைனிதால் பகுதியில் உள்ள 'திரி ரிஷி' என்ற ஏரியானது அங்கு அமைவதற்கும் புலத்தியரே காரணம் ஆவார்.
இத்தகைய மகிமையெல்லாம் சரி; இவை யாவும் வடநாட்டில்தாமே, தென்னாட்டில் எங்கே புலத்தியர் என்கிறீர்களா? பொறுங்கள். புலத் தியர் வருகிறார்.
புலத்தியர், ராவணனின் தாத்தா. புலத்தியருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் அகத்தியர்; மற்றவர் விஸ்ரவா. விஸ்ரவாவுக்கு, இத்விதா எனும் முனி குமாரத்தி மூலமாகப் பிறந்த மகன் குபேரன்; கேகசி எனும் மற்றொரு மனைவி மூலமாகப் பிறந்தவர்கள் ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை, விபீஷணன் ஆகியோர்.
புலத்தியர், தன் மகனான அகத்தியர், பனங்காட்டுடையாரை வழிபட்ட இடத்துக்கு வந்தார். அங்கே சுயம்பு லிங்கமாக சுவாமி எழுந்தருளியிருப்பதை அகத்தியர் தெரிவித்திருந்தார். தானும் அந்தச் சுயம்புவை வழிபடலாம் என்று வந்தார். சுற்றிச் சுற்றித் தேட... ம்ஹும். சிவலிங்கத் திருமேனி எங்கேயும், தென்படவே இல்லை. தவித்துப் போன புலத்தியர், 'அவன் அருளாலேயே அவன் தாள்' வணங்க முடியும் என்பதை உணர்ந்து, தானே ஒரு லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவ்வாறு அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவரே கிருபாநாதேஸ்வரர்.
புலத்தியர் இங்கு வழிபட்டது பற்றியதான இந்தச் செவிவழிக் கதை, கிருபாநாயகியான அம்பிகை தாம் முதலில் மனமிரங்கி, தாலபுரீஸ் வரரைப் புலத்தியருக்குக் காட்சி கொடுக்கும்படி சொன்னதாகவும் தெரிவிக்கிறது. அருள் காட்டியதால், கிருபாநாதேஸ்வரர் மற்றும் கிருபாநாயகி.
எப்படியோ, முனிவர்கள் மற்றும் மகான்களுடன் இறைவன் இப்படி யெல்லாம் விளையாடியதால், நமக்கு லாபம். அருள்மிகு கிருபாநாதேஸ்வரர் முன்னால் நிற்கிறோம். சந்நிதி அமைப்பு, தாலபுரீஸ்வரர் சந்நிதி அமைப்பு போன்றே உள்ளது. துவாரவாயிலில் ஒரு சிறப்பு. துவார பாலகர்கள் இருக்கிறார்கள்; பின்னே, சுவரில் அவர்களின் வண்ண ஓவியங்களும் உள்ளன. பழைய ஆவணங்களில், ஓவியங்கள் மட்டுமே உள்ளனவாகக் குறிப்புகள் உள்ளன. இப்போது துவாரபாலகச் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. சமீபகாலத் திருப்பணிகளாம். இந்தக் காலகட்டத்திலும், இப்படிப்பட்ட திருப்பணிகள் நடைபெறுகின்றன என்பதைக் கேட்கும்போது, நெஞ்சம் நிறைகிறது.

ஸ்நபன மண்டப நந்தியைத் தாண்டி பார்வை யைச் செலுத்துகிறோம். அருள்மிகு கிருபாநாதேஸ் வரர். சதுர பீட ஆவுடையாரில், சற்றே குட்டையான பாணம்.
காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து பற்பல தலங்களை தரிசித்தார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அப்போது, வன்பார்த்தன் பனங்காட்டூருக்கும் வந்தார். இங்குள்ள பெருமானை தரிசிக்காதாரைப் பற்றி என்ன சொல்வது என்று பதிகம் பாடினார்.

விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானைஅடையில் அன்புடையானை யாவர்க்கும் அறிவொண்ணாமடையில்வாளைகள் பாயும் வன்பார்த்தன் பனங்காட்டூர்சடையில் கங்கை தரித்தானைச் சாராதார் சார்வென்னே
இரண்டு சுவாமிகளையும் வணங்கி, மூலவர் சந்நிதிகளை வலம் வருகிறோம். இரண்டு சந்நிதிகளுக்கும் சேர்த்து, ஸ்நபன மண்டப உயரத்திலேயே மேடை போன்ற அமைப்பு உள்ளது. தாலபுரீஸ்வரரின் கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்கை. இந்தச் சந்நிதிக்கு சண்டேஸ்வரர் இல்லை. கிருபாநாதேஸ்வரரின் கோஷ்டத்தில் விநாயகர் இல்லை. தட்சிணாமூர்த்தி அழகோ அழகு. வலக் காலைத் தொங்க விட்டுக் கொண்டு இடக் காலைக் குத்துக் காலிட்டுக் கொண்டிருக்கிறார்; சின்முத்திரையும் புத்தகச் சுவடியும் தாங்கி, சின்னப் புன்னகையோடு அருள் பாலிக்கிறார். கிருபாநாதேஸ்வரரின் மேற்குக் கோஷ்டத்தில் மகா விஷ்ணு, வடக்குக் கோஷ்டத்தில் பிரம்மா. இந்தச் சந்நிதிக்கான சண்டேஸ்வரர், தனி மண்டபத்தில் உள்ளார். வலம் வந்து சுவாமி சந்நிதிகளை மீண்டும் வணங்கி நிற்கிறோம்.
சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளின் முகப்புப் பகுதிகள் மற்றும் உள் பிராகாரத்தின் கிழக்குச் சுற்றுப் பகுதி ஆகிய யாவும் சேர்ந்து, ஒரு பெரிய மண்டபம் போலவே தோற்றம் தருகின்றன. இந்த மண்டபத்தின் தூண்கள் வெகு சிறப்பானவை. இவற்றில் காணப்படும் அழகழகான சிற்பங்கள், தமிழகத்தின் கட்டுமானச் சிறப்புக்கு அத்தாட்சிகளாகத் திகழ்கின்றன.
மூன்று நிலை கோபுர உள் வாயிலைக் கடந்து வந்தோமில்லையா? வாயிலுக்கு வெளியில் தூண் ஒன்றில், கையில் வில்லுடன் ராமர் நிற்கிறார். மண்டபத்தின் உள்ளே, கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு முன்பாக, மற்றொரு தூணில், இரண்டு குரங்குகள் மற்போர் செய்கின்றன. வேறு யார்? வாலியும் சுக்ரீவனும்தாம்! இதில் என்ன சிறப்பு தெரியுமா? ராமர் தூணிலிருந்து பார்த்தால், வாலி- சுக்ரீவன் தெரிவார்கள்; ஆனால், வாலி- சுக்ரீவத் தூணிலிருந்து பார்த்தால், ராமர் தெரிய மாட்டார்!
தாலபுரீஸ்வரர் சந்நிதிக்கு எதிரில் இருபுறமும், ஒரு தூணில் ஞானசம்பந்தர்- அப்பர் பெருமான்; இன்னொரு தூணில் சுந்தரர்- மாணிக்கவாசகர். அடுத்துள்ள ஒரு தூணில் ஏகபாத மூர்த்தி; அதே தூணின் இன்னொரு புறத்தில் கருடன். இவருக்கு எதிர்த்தூணில் வேணு கோபாலனாகக் கண்ணன்.
கிருபாநாயகி சந்நிதியின் எதிரில் நாகலிங்கம், தாலபுரீஸ்வரர் சந்நிதியின் எதிரில் புருஷாமிருகம், கிருபா நாதேஸ்வரர் சந்நிதியின் எதிரில் யோக தட்சிணாமூர்த்தி, பற்பல தூண்களில் அனுமன், பூதகணங்கள், கிளிகள், சிங்கங்கள், யாளிகள், முட்டையில் இருந்து பொறிந்து வரும் குஞ்சு... இப்படியாகப் பலவிதமான சிற்பங்கள்; ஒவ்வொன்றும் ஒரு கலைக் கருவூலம்.
மண்டபத்தையும் சிற்பங்களையும் பார்த் துக் கொண்டே அம்பாள் சந்நிதிகளை அடை கிறோம்.
கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கும் உள்வாயிலுக்கும் இடையில், தெற்கு முகமாக அடுத்தடுத்து இரண்டு சந்நிதிகள். கிருபாநாதேஸ்வரர் சந்நிதியை அடுத்து இருப்பது அமிர்தவல்லி அம்மன் சந்நிதி; இவர் தாலபுரீஸ்வரரின் திருவாட்டி. உள்வாயிலுக்கு அருகில் இருப்பது கிருபாநாயகி அம்மன் சந்நிதி; இவர் கிருபாநாதேஸ்வரரின் திருவாட்டி. இருவரும் நான்கு திருக்கரங்களும் அபயவரதமும் கொண்டு, நின்ற திருக் கோலத்தில் காட்சி தருகிறார்கள்.

'தண்ணார் மாமதிசூடித் தழல் போலும்
திருமேனிக் கெண்ணார்நாண் மலர்கொண்டு அங்கிசைந்தேத்தும் அடியார்கள்பண்ணார் பாடலறாத படிறன் தன் பனங்காட்டூர்பெண் ஆணாய பிரானைப் பேசாதார் பேச்சென்னே'

- என்று அம்மையும் அப்பனுமாக இறைவன் காட்சி தருவதையே சுந்தரரும் பாடுகிறார். ஐயனின் அருள் சக்தியாக விளங்கும் அம்மையை (இரண்டு அம்பாள் திருமேனிகளை) வணங்குகிறோம். இரண்டு சந்நிதிகளுக்கும் இடையில் பள்ளியறை.
சுவாமி- அம்பாளை தரிசித்து நிற்கிறோம். உள் மண்டபத்தில் உள்ள ஒருவரை நாம் கண்டே ஆக வேண்டும். யார்?
தாலபுரீஸ்வரர் சந்நிதிக்கு முன்னால் உள்ள தூண் ஒன்றில், சுவாமியைக் கைகூப்பி வணங்கிக் கொண்டே இவர் நிற்கிறார். இந்தத் திருக்கோயில் திருப்பணிகளைச் செய்வித்து 1929-ல் கும்பாபிஷேகம் நடைபெற காரணமாக இருந்த தேவகோட்டை நகரத்தார் பெருமகன் திருவாளர் ஏகப்பச் செட்டியார்தான் இவர்! இவர் மட்டுமல்லாமல் இவரின் வழித்தோன்றல்கள் இன்றளவும் ஆலயப் பணிகளைச் செவ்வனே செய்து, கோயிலைத் தூய்மையாகப் பராமரிக்கின்றனர்.
திருப்பனங்காடு திருக்கோயிலுக்கு முதலாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதி ராஜன், முதலாம் குலோத்துங்கன் முதலான சோழர்களும், விஜயநகர அரசர்களும் திருப்பணிகள் செய்துள்ளனர்.
சக ஆண்டு 1303-ல் (சுமார் கி.பி.1381 வாக்கில்) குளம் உடைப்பெடுத்து, கோயில் நிலங்கள் தரிசாகினவாம்; கோயில் நிலங்கள் சிலவற்றை விற்று உடைப்பைச் சரி செய்தார்களாம். இவ்வூருக்கும் கோயிலுக்கும், கண்ணப்ப நாயனார் (ஆமாம், பொத்தப்பி நாட்டுத் திண்ணன்) பரம்பரையினர் சிலர் நிவந்தங்கள் வைத்திருந்தனர்.
கோயிலை விட்டு வெளியே வருகிறோம். எதிரில் கோட்டை முனீஸ்வரர் ஆலயம். இவர்தாம் இந்த ஊரின் ஆதி தெய்வம் என்கிறார்கள். யோகானந்த முனீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிற இவர், யோகாசன நிலையில் அமர்ந்து, இடக் கையைத் தொடைமீது வைத்துக் கொண்டும், வலக் கையில் ருத்ராட்ச மாலையை ஏந்திக் கொண்டும், சடாமுடிதாரியாக, வடக்கு நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு முன்னே, ஒரு புறம் துவார விநாயகர்; இன்னொரு புறம்... இடக் காலில் யோக பட்டம் கட்டிக் கொண்டு யானை மீது அமர்ந்த ஐயப்பன். சிறியதாக உள்ள முனீஸ்வரர் கோயிலுக்கு அருகில் வன்னி மரம். மரத்தடியில் நாகரும் லிங்கமும். அகத்தியர் வழிபட்ட காலத்தில், இந்த முனீஸ்வரர், பனம் பழங்களை உதிரச் செய்தாராம். அவற்றை இறைவனுக்கு அகத்தியர் படைத்தார். இந்த வழக்கப்படி, இப்போதும், பனம்பழம் கிடைக்கும் காலங்களில் சுவாமிக்கு நைவேத்தியம் உண்டு. இன்னும் சற்று வடக்காக, குளத்துக்கு எதிரே சனீஸ்வரர் சந்நிதி உள்ளது.
இயற்கை அழகு கொஞ்சும் சூழலில் மிக அமைதியாக உள்ள திருக்கோயிலைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து நகர முயற்சிக்கிறோம். உள்ளூர்க்காரர் ஒருவர் விசாரிக்கிறார்: “சுந்தரர் கிணத்த பாத்தீங்களா?”
அதென்ன சுந்தரர் கிணறு? ஊரின் தொடக்கத்தில் சற்றே உள்ளடங்கி உள்ள ஒரு சிறிய ஊற்று. அதற்குத்தான் இந்தப் பெயர். காரணம்?
சுந்தரர் இந்த ஊருக்கு வந்தபோது, அவருக்கு தாகம் எடுத்ததாம். அவருக்குத் தண்ணீர் வேண்டும் என்பதற்காக... இறைவன், எருதாக வந்து தமது காலால் கீறி ஊற்றை ஏற்படுத்தினார். அதுவே ஊற்றுத் தீர்த்தம் அல்லது ஊற்றங்குழி. இறைவன் கட்டுச் சாதம் கொண்டு வந்து சுந்தரருக்கு உணவளித்து, அப்போது தண்ணீருக்காக இவ்வாறு செய்ததாகவும், சிலர் சொல்கிறார்கள். இந்தக் கதை பெரிய புராணத்தில் இல்லை. செவிவழிச் செய்தியே.
திருப்பனங்காடு, பனைமரத்தைத் தல மரமாகக் கொண்ட ஐந்து திருத் தலங்களில் ஒன்று. திருப்பனந்தாள், திருப்பனையூர், திருவத்திபுரம் (செய்யாறு), புறவார் பனங்காட்டூர், வன்பார்த்தன் பனங்காட்டூர் ஆகியவையே இந்த ஐந்து.
வன்பார்த்தன் பனங்காட்டூர் கோயிலுக்கு உள்ளே, வெளிப் பிராகாரத்தில், பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு பனை மரங்கள் உள்ளன என்று பார்த்தோம் இல்லையா? ஒன்று ஆண் பனை; மற்றொன்று பெண் பனை. இரண்டும் ஒரே மரத்தின் விதையிலிருந்தே முளைத்தனவாம். இருந்தாலும், ஒன்று ஆணாகிவிட்டது; மற்றது பெண்ணாகிவிட்டது என்கிறார்கள். கோட்டை முனீஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் உள்ள பனை மரங்களே ஆதி தலமரங்கள்.
இறைவனின் அற்புத விளையாடல்களையும் இறையன்பர்களின் இடையறாத பேரன்பையும் எண்ணிக் கொண்டே விடை பெறுகிறோம்!

வட குரங்காடுதுறை

நீலமா மணிநிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க
வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு
கோயில்ஏலமொடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள்
உந்திஆலியா வருபுனல் வடகரை அடை குரங்காடுதுறையே

- என்று திருஞானசம்பந்தர் போற்றுகிற திருத் தலமான வடகுரங்காடுதுறைக்குப் போகலாமா?
எங்கே இருக்கிறது வடகுரங்காடுதுறை?
இந்தப் பெயரைச் சொல்லிக் கேட்டால், பலருக்கும் தெரியாது. ஆடுதுறை பெருமாள்கோவில் என்பதே புழக்கத்தில் உள்ள பெயர். கும்பகோணம்- திருவையாறு சாலையில் சென்றால் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் ஆகிய ஊர்களைத் தாண்டிய பின்னர், உள்ளிக்கடை எனும் ஊர் வரும். அதற்கடுத்து உள்ளது ஆடுதுறை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மீ; திருவையாறில் இருந்து சுமார் 5 கி.மீ.!
ஆடுதுறை என்ற பெயரிலேயே இன்னொரு தலம் இருப்பதாலும், இந்தத் தலத்துக்கு அருகில் பெருமாள்கோவில் என்றோர் ஊர் இருப்பதாலும், இரண்டையும் வேறுபடுத்து வதற்கு, நாம் இப்போது இருக்கும் தலத்துக்கு ஆடுதுறை பெருமாள்கோவில் என்ற பெயர் வழங்குகிறது.
சிறிய ஊர். சாலையோரத்திலேயே, சற்றே உள்ளடங்கினாற் போல் கோயில் தென்படுகிறது.
ஐந்து நிலை கிழக்கு ராஜ கோபுரமே தலைவாயில். உள்ளே நுழைந்தால், வலப் பக்கம் பழைய வாகன மண்டபம். அதற்கு மேற்காக, நவக்கிரகச் சந்நிதி. சமீபகாலப் பிரதிஷ்டை. அதற்கும் மேற்காக, அம்பாள் சந்நிதி.
மூலவர் கோயிலுக்குப் போகும் உள் வாயிலுக்கு எதிரே நந்தி. இவரே பிரதோஷ நந்தி. இவற்றைத் தவிர, இந்த வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதும் இல்லை. வெளிப் பிராகாரத்தின் ஒரு பகுதியில் பசு மடம். உள் வாயிலில் நுழைந்தால் உள் பிராகாரத்தை அடையலாம்.
கி.மு 700-600 காலத்திய கோயில் இது என்கிறார்கள். கி.பி, 7-ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் வரும்போது, நல்ல பெரிய கோயிலாக இருந்துள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இந்தக் கோயில், கிட்டத்தட்ட 93 ஆண்டுகள் குடமுழுக்கு காணாமல், பின்னர் ஊர்க்காரர்கள்- பக்தர்களது பெருமுயற்சியால், 2001 ஆகஸ்ட் மாதம் குடமுழுக்கு கண்டது.
சுவாமிக்கு அருள்மிகு தயாநிதீஸ்வரர் என்பது பிரதான திருநாமம் என்றா லும், குலைவணங்கீசர் என்பது பண்டைய திருநாமம். அதென்ன குலைவணங்கீசர்?
கர்ப்பிணிப் பெண் ஒருத்தி, இந்தப் பக்கமாகச் சென்று கொண்டிருந்தாள். காவிரிக்கரை என்றாலும், இந்தப் பகுதியெல்லாம் வெயில் கொளுத்தும். வயிற்றுச் சுமையோடு நடந்த அவளுக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. தண்ணீர் தருவார் எவரும் இல்லை. கூப்பிடு தூரத்தில் ஓடினாலும்... வெயில் கொடுமையில், காவிரி வரை நடக்கவோ, அப்படியே நடந்தாலும் வயிற்றுப் பிள்ளையுடன் குனிந்து நீர் எடுக்கவோ அவளுக்குத் திராணியில்லை. தவித்த வாய்க்குத் தண்ணீர்?
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகருக்கு, அந்தப் பெண்ணின் பரிதவிப்பு புரியாதா என்ன? செல்ல மகளைச் சாய்ந்து குனிய வைக்காமல், தென்னை மரத்தைச் சாய்த்துக் குனிய வைத்தார்; பெண்ணின் வாய்க்கு அருகே சாய்ந்து வந்தது தென்னங்குலை. குலையை வளைத்துக் கருணை புரிந்ததால், குலை வணங்கீசர்.
குலைவணங்கீசரின் கருணையைச் சிலாகித்துக் கொண்டே, உள் பிராகாரத்தை வலம் வருகிறோம். கிழக்குச் சுற்றுக்குள்தானே நுழைந்தோம்... தென் கிழக்கு மூலையில் கோயில் மடப்பள்ளி. தெற்குச் சுற்றில் செடி- கொடிகள். தென்மேற்குப் பகுதியில், மஹா கணபதி சந்நிதி. அடுத்து, கோயில் உள்மதிலை ஒட்டினாற் போல், சுப்பிரமணியர் சந்நிதி. ஒரு திரு முகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டவரான வள்ளி- தேவசேனா சமேத சுப்பிரமணியரை, அருணகிரிநாதரும் பாடினார்.

திரைக்கரம் கோலி
நவமணிகொழித்திடும் சாரல்
வயலணிதிருக்குரங்காடு துறையுறை பெருமாளே
என்று அருணகிரிநாதர் வணங்கிய பெருமானை வணங்கி நகர்கிறோம். அடுத்து காசிவிஸ்வநாதரும் கஜலட்சுமியும். வடக்குத் திருச்சுற்றில் திரும்பி நடந்து, வடகிழக்குப் பகுதியை அடைந்தால், தலமரமான தென்னை. வடகிழக்கு மூலையில், தெற்குப் பார்த்த நடராஜர் சபை. வடகுரங்காடுதுறையின் நடராஜர், மற்ற தலங்களின் நடராஜரிலிருந்து வேறுபட்டவர். எப்படி? பிற தலங்களின் நடராஜரை நினைத்துப் பாருங்கள். செப்பு, ஐம்பொன் என்று இப்படி ஏதாவதோர் உலோகச் சிலையாக இருப்பார். இங்கே எழுந்தருளி ஆனந்தத் தாண்டவம் ஆடுகிற மூர்த்தி, ஆதிமூர்த்தி; எனவே, மூலவராக, சிலாரூபமாக (கற்சிலை) காட்சியளிக்கிறார். சிவகாமி அம்மையும் நடராஜரும் மூலவர்களாக தரிசனம் தருவது வெகு விசேஷம்.

கிழக்குச் சுற்றில் திரும்பினால், சனி பகவான். அடுத்து பைரவர். தொடர்ந்து சூரியன், நாகர். அடுத்து, நால்வருக்கு பதிலாக மூவர்; ஆமாம், தேவாரம் பாடிய மூவர். அவர்களையட்டி, எந்தப் பெண்ணுக்காகத் தென்னங்குலையை சிவனார் வளைத்தாரோ, அந்தச் செட்டிப் பெண்.
பிராகார வலம் நிறைவடைந்து, மூலவர் சந்நிதிக் குச் செல்ல யத்தனிக்கிறோம். வாயிலில், இடப் பக்கம், விநாயகர். அருகில், பூரண- புஷ்கலை; ஐயனார். வணங்கி உள்ளே புகுகிறோம். முக மண்டபம். தூண்களின் அமைப்பு, கோயிலின் தொன்மைக்குச் சான்று பகர்கின்றன. வலப் பக்க தூண் ஒன்றில், சிவலிங்கத்தை வழிபடும் ஆஞ்ச நேயர். அனுமன், சிவலிங்க வழிபாடு செய்த ஐந்து முக்கிய சிவத்தலங்களில், வடகுரங்காடு துறையும் ஒன்று. இந்தத் தூண் ஆஞ்சநேயர்- பிரார்த்தனா மூர்த்தி. இவரிடம் என்ன நேர்ந்து கொண்டாலும், உடனடியாக நிறைவேற்றி வைப்பார். நேர்த்திக் கடன்காரர்கள் நிறைய பேர், அவரைச் சுற்றியிருக்கும் இடங்களிலும், கம்புகளிலும், பிரார்த்தனைத் துணிகளைக் கட்டி முடிச்சுப் போட்டிருக்கிறார்கள்.
'மாண்புறு மாருதியே, உன் தாள் சரணம்' என்று சொல்லிக் கொண்டே, அடுத்துள்ள மண்டபத்துள் நுழைகிறோம். மூலவருக்கு எதிரில், நந்தி. வலப் பக்கம், பாதுகாப்பு அறை. பக்கவாட்டு வாயில். இடப் பக்கத்தில், ஏதோ சாளரம் போலிருக்கிறது. அர்ச்சகர் சொன்ன பின்னால், உற்று கவனிக்கிறோம். விஷயம் புரிகிறது. இங்கு முற்காலத்தில் சுரங்கம் இருந்ததாம். தஞ்சாவூர் அரண்மனைக்கோ, தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கோ போகும் பாதையாக இருந்திருக்க வேண்டும். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மூடி விட்டார்களாம். ஆனால், வெகு காலத்துக்குச் சுரங்கத்தின் தொடக்கப் படிக்கட்டுகள் வெளியில் தெரியும்படிதான் இருந்துள்ளது.
சுரங்கத்தில் இருந்து கவனத்தைத் திருப்பி, மூலவர் சந்நிதிக்குள் செலுத்துகிறோம். வாயில் அருகே உள்ள விநாயகரையும் துவாரபாலகர்களையும் வணங்கி,உள்ளே அர்த்தமண்டபம் தாண்டிப் பார்வையைச் செலுத்த... அருள்மிகு தயாநிதீஸ்வரர். இவர்தாம் குலை வணங்கீசர். அது மட்டுமா? இவரே சிட்டி லிங்கேசர்; இவரே வாலீசர். காரணப் பெயர்கள் கொண்டவரான சர்வலோக காரணன். சிட்டுக்குருவி ஒன்று இவரை தினந்தோறும் வழிபட்டது... எனவே, சிட்டிலிங்கேசர் ஆனார்.
இந்தத் தலத்துக்குக் குரங்காடுதுறை என்றுதானே பெயர்; எந்தக் குரங்கு இங்கே ஆடியது?
காவிரிப் பகுதியிலேயே, இரண்டு ஆடுதுறைகள் இருக்கின்றன. இரண்டும் குரங்குகள் நீராடி வழிபட்ட தலங்கள். ஆடுதுறை என்று எல்லோருக்கும் பிரபலமாகத் தெரிவது, திருவிடை மருதூருக்கு அருகில் உள்ள தென் குரங்காடுதுறை. அது, சுக்ரீவன் வழிபட்ட இடம். நாம் இப்போதிருக்கும் வட குரங்காடுதுறை, வாலி வழிபட்ட தலம்
அதனால், சுவாமிக்கும் வாலீசர் எனும் காரணத் திருப்பெயர். 'கோலமா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி வாலியார் வழிபடப் பொருந் தினார்' என்று வாலி வழிபட்டதைக் குறிப்பிட்டு, ஞான சம்பந்தர் பாடுகிறார். வட்ட வடிவ ஆவுடையாருடன், சற்றே குட்டையான பாணம் கொண்டவராக அருளும் மூலவ ருக்கு, அழகு சடைமுடிநாதர் என்றும் ஒரு பெயர் உண்டு.
சடாமுடிதாரியாக சிவனை வணங்குவது பழைய மரபு. 2 மற்றும் -3- ஆம் நூற்றாண்டுகளில் சடாமுடி சிவ வழிபாடுதான், மிக அதிகமாகப் பரவியிருந்தது என்பதைக் கொண்டு நோக்கும்போது, இந்தக் கோயிலின் தொன்மை விளங்கும்.
ஆடுதுறை ஐயனை வணங்கி வந்து, மீண்டும் உள் பிராகார வலம் புகுகிறோம். இப்போது... பிராகாரத்தில் நின்று பார்க்கும்போது, மூலவர் கருவறையும் மண்டபங்களும் கிழக்கு மேற்காக- வெகு நீளமாக அமைந்திருப்பது புரிகிறது. சுற்றி வரும்போது தெற்குச் சுற்றில், மூலவர் மதிலில் சற்றே நீட்டிக் கொண்டிருக்கும் இடம் நமது கவனத்தை ஈர்க்கிறது. முன்னரே பார்த்தோமே, சுரங்கப் பாதைப் பகுதி... அதன் நீட்சி இது.
இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் கூட, கோயிலுக்கு வருபவர்கள், முதலில் பிராகாரச் சுற்றுக்கு வந்து இங்குள்ள விநாயகரை வழிபட்டு, சுரங்க வாயிலையும் தொழுது, பின்னர் உள்ளே போவார்களாம். நாமும் விநாயகரை வேண்டுகி றோம். மனச் சுரங்கத்தில் கொலு வீற்றிருக்கும் பரம்பொருள் நாதனின் பரம கருணைக்கு வழி காட்டும்படி வேண்டுகிறோம்.
தொடர்ந்து நடந்தால், கோஷ்ட மூர்த்தங்களின் தரிசனம். தெற்குக் கோஷ்டத்தில், விநாயகர்; அடுத்து தட்சிணாமூர்த்தி. ஆதி மௌன குருவாக அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் காலடியில், வழக்கமாக சனகாதி முனிவர்கள் நால்வர் அமர்ந்து உபதேசம் கேட்பார்கள் இல்லையா? சற்று கவனமாகப் பாருங்கள்... கூடுதலாக நான்கு பேர்; கந்தர்வர்கள், கிம்புருடர்கள். ஆஹா! குரு, சொல்லாமல் சொல் வதைக் கேட்க, எல்லாரும் வந்தார் போலும்!
மூலவர் சந்நிதியின் தெற்குச் சுற்றுச் சுவரும் மேற்குச் சுற்றுச் சுவரும் சந்திக்கிற இடத்தில், வாலி வழிபடுவதைக் காட்டும் சிறிய சிற்பம்.
மூலவர் பின்புறக் கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர். வழக்கமாக இந்தக் கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருப்பார். அர்த்தநாரீஸ்வரர் இருப்பது சிறிது அரிதானது. அதுவும் இந்த அர்த்தநாரீஸ்வரர் அழகோ அழகு. கொவ்வைச் செவ்வாயின் குமிழ்சிரிப்பும், வாம பாகத்து ஒய்யாரமும், திருப்புருவ கம்பீரமும் கண்கொள்ளாப் பேரழகு! பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டுக் கொண்டே நகர்ந்தால், வடக்குக் கோஷ்டத்தில் பிரம்மா, துர்கை. அஷ்டபுஜ துர்கை பிரயோகச் சக்கரத்துடன் தரிசனம் தருகிறாள். சோழநாட்டுத் திருக்கோயில்கள் பலவற்றில், அஷ்ட புஜ துர்கையை, அதிலும் பிரயோகச் சக்கரம் தாங் கிய துர்கையை தரிசிக்கலாம். தங்களது படைத் தலைவியாகவே இத்தகைய துர்கையைச் சோழ மன்னர்கள் வழிபட்டுள்ளனர். வடக்குச் சுற்றில், தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர்.
சுற்றி வந்து மீண்டும் தயாநிதீஸ்வரரை வணங்குகிறோம். குரங்கு, சிட்டுக்குருவி போன்ற சின்னஞ்சிறிய ஜீவன்களுக்கும் அருள்பாலிப்பவராக இருப்பதால், இவர் பரம தயாளு.
மூலவர் சந்நிதி சுற்றுச்சுவர்களில் நிறைய கல்வெட்டுகள். குரங்காடுதுறை ஆழ்வார், குரங் காட்டுமாதேவர் என்றெல்லாம் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிற தயாநிதீஸ்வரர் திருக்கோயிலுக்குப் பல்லவர்களும் சோழர்களும் திருப்பணிகள் செய்துள்ளனர்.
சுவாமி மட்டுமல்ல, இந்த இடத்தில் பாயும் காவிரியும் பரம கொடையாளி என்றும் பாடுகிறார் ஞானசம்பந்தர்.
கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடி முல்லை வேங்கையே ஞாழலே விம்மும் பாதிரிகளே விரவி எங்கும்ஓங்குமா காவிரி... ... ... ...முத்துமா மணியடு முழைவளர் ஆரமும் முகந்து உந்தி எத்துமா காவிரி ... ... ... ...
முத்து, மணி, சந்தனம், இன்னும் யானைக் கொம்புகள், அகில், பழங்கள் என்று பலவும் ஏந்தி வரும் காவிரி.
மூலவரை வணங்கி விட்டு, அம்மன் சந்நிதியை அடைகிறோம். முக மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகிய அமைப்புகளுடன் கூடிய சந்நிதி. மகா மண்டபத்தில் சிறிய நந்தி. அருள்மிகு அழகுசடைமுடியம்மை எனும் திருநாமம் கொண்ட அம்பாள், நின்ற கோல நாயகியாக நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். ஜடாமகுடேஸ்வரி என்பது வடமொழிப் பெயர். அம்பாளும் பிரார்த்தனா சக்தி; கேட்டதெல்லாம் தருபவள். பிள்ளை வரம் வேண்டுபவர்கள் பௌர்ணமி நாட்களில், மடியில் பாலிகை கட்டி வந்து, அம்மனுக்கு மஞ்சள் மாலை சார்த்தினால், பிள்ளைப் பேறு ஸித்திக்கும். அம்மனுக்கு
மஞ்சள் இட்டு, மருதாணி அரைத்துப் பூசி, அவள் பெயரால் வருகிற பெண்களுக்கு மருதாணி அரைத்து இட்டால், தடைப்பட்ட திருமணங்கள் கூடி வரும்.
காவல் தெய்வமான மதுரவீரன் (மதுரைவீரன் இல்லை... மதுர- மதுரமான), பல நாட்கள் கவனிப்பாரற்றுக் கிடந்த நிலையில், பெரியவர் ஒருவரது நெஞ்சில் தோன்றி, தன்னைக் கவனிக்கச் சொன்னாராம். ஈசான மூலையில் மதுரவீரனுக்கு முறையான பிரதிஷ்டையும் பூஜைகளும் நடைபெற்ற பின்னரே, வெகு நாட்களாகத் தடைப்பட்டிருந்த தயாநிதீஸ்வரர் கும்பாபிஷேகம் நடைபெற வழி கிடைத்ததை, ஊர்ப் பெரியவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆதி காலத்தில், மதுரவீரன் ஸ்தாபித்த சிவலிங்க மூர்த்தமே தயாநிதீஸ்வரர் என்றும் கர்ணபரம்பரை கதையும் நிலவுகிறது.
அருள்மிகு அழகு சடைமுடியம்மை உடனாய அழகு சடைமுடிநாதராம் பரம கருணை வள்ளலை வழிபட்டு வெளியே வருகிறோம். பரம்பொருளின் கருணை மனமெல்லாம் ஆட்கொள்ள, காவிரியின் குளிர்காற்று மெள்ளத் தழுவுகிறது.